| ADDED : மே 31, 2024 03:09 AM
அரவக்குறிச்சி: க.பரமத்தி ஒன்றியத்தில், 30 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்கள், தங்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டி தரக்கோரி, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் முறையிட்டனர். இதன் பயனாக அரசு மூலம் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில், கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, ஏழை எளிய ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.வீடுகள் முறையாக கட்டப்படாததால், சில ஆண்டுகளிலேயே வீட்டின் மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தன. தற்போது தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமாகி, குடியிருப்போர் வீடு இருந்தும் வாசலில் உறங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீட்டுக்குள் தேங்கி நின்று, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, க.பரமத்தி ஒன்றியம் முழுவதும் உள்ள பழைய தொகுப்பு வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, வீடுகளை பராமரிக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.