ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று உருவாக வாய்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன் அறிக்கை:தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. நேற்று காலை நிலவரப்படி, இந்த அமைப்பு அதே பகுதியில் நிலவுகிறது. அது இன்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம்.அதன்பின், இந்த அமைப்பு, வடக்கு, வடகிழக்கு திசையில் நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆந்திர திசையிலிருந்து 'யு டர்ன்' அடிக்கும் தன்னார்வ வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் கூறியதாவது:வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திராவை நெருங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்றைய நிலவரப்படி, சென்னையில் இருந்து 260 கி.மீ., தொலைவில் இருந்த இந்த அமைப்பு ஆந்திரா நோக்கி சென்று, இன்று பிற்பகலில் 'யு டர்ன்' போட்டு, வடகிழக்கில் பயணிக்கத் துவங்கும்.இதனால், நாளை இந்த அமைப்பு மீண்டும் சென்னைக்கு 300 கி.மீ., தொலைவில் நிலவுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும், மழை பொழிவில் பெரிய தாக்கம் இருக்காது; கடலில் சூறாவளி காற்று வீசுவது தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.