பனை மரங்களை வேரோடு பிடுங்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை தேவை
ப.வேலுார், ப.வேலுார் அருகே, நன்செய் இடையாற்றில் சாலையில் இருந்த பனை மரங்களை, வேரோடு பிடுங்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ப.வேலுார் அருகே நன்செய் இடையாற்றில் இருந்து, ப.வேலுார் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், 100க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனர். தற்போது பனை மரங்கள், 6 அடி உயரம் வளர்ந்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஐந்துக்கு மேற்பட்ட பனை மரங்களை வேரோடு பிடுங்கியுள்ளனர். காலையில் அப்பகுதியை கடந்த மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மரங்களை அழித்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.