ப.வேலுார்: ப.வேலுார் தினசரி வாழை மார்க்கெட்டில், வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை சரிவடைந்தது.ப.வேலுார், பரமத்தி, பொத்தனுார், உள்ளிட்ட காவிரிக் கரையோர கிராமங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பூவன், ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகிறது. ப.வேலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, தினசரி வாழை மார்க்கெட்டுக்கு வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகிறது. அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து எடுத்துச் செல்வர். இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.நேற்று, 800-க்கும் மேற்பட்ட வாழைத்தார் ஏலத்துக்கு வந்ததால் விலை சரிவடைந்தது. கடந்த வாரம், 400 ரூபாய்க்கு பூவன் தார் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரஸ்தாளி தார், நேற்று 400 ரூபாயாக குறைந்துள்ளது. 10 ரூபாய்க்கு விற்பனையான ஒரு மொந்தன் வாழை, ஏழு ரூபாயாக குறைந்துள்ளது. வரத்து அதிகரிப்பால், வாழைத்தார்கள் விலை சரிவடைந்தது என கவலையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.