இளம் வாக்காளர் சேர்க்கை முகாம் கல்லுாரியில் கலெக்டர் ஆய்வு
ராசிபுரம்: ராசிபுரம் தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்த, இளம் வாக்காளர்கள் சேர்க்கை முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலுார், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் வரும், 2026 ஜனவரி, 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்காக நாமக்கல் செல்வம் கல்லுாரி, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லுாரிகளில் ஏற்கனவே சிறப்பு முகாம் நடத்தப்பட்டன.தொடர்ந்து ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரியில், இளம் வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்காமூர்த்தி கலந்து கொண்டு மாணவிகளுக்கு படிவம், 6ஐ வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், ''2026 சட்டசபை தேர்தலில், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும், வாக்களிக்கும் வகையில் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். கல்லுாரி வளாகங்களில் நடக்கும் முகாம்களில், படிவத்தை பூர்த்தி செய்து பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து அங்கு நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் வாக்காளர் பதிவு அலுவலர் முருகன், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்