| ADDED : செப் 13, 2011 02:01 AM
நாமக்கல்: தங்கத் தோடு பறிக்க, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்த
முற்பட்ட வாலிபரை, மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து போலீஸில்
ஒப்படைத்தனர். நாமக்கல், ராமாபுரம்புதூரøச் சேர்ந்தவர் அசாத். அவரது மகள்
ரேஷ்மா, நாமக்கல் கடைவீதி அருகே உள்ள பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து
வருகிறார். நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது, மாணவி ரேஷ்மா, பள்ளியில்
உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, பள்ளியில் நுழைந்த வாலிபர்
ஒருவர், மாணவியின் வாயைப் பொத்தி, டி.வி.எஸ்., 50 வண்டியில் கடத்த
முற்பட்டுள்ளார். அதிர்ச்சியில் குழந்தை கூச்சலிட்டத்தையடுத்து, பள்ளி
ஆசிரியர்கள், பள்ளியை ஒட்டியிருந்த மக்கள், அந்த வாலிபரை விரட்டிப்
பிடித்து குழந்தையை மீட்டனர். மேலும், வாலிபரை நன்கு 'கவனித்து' போலீஸில்
ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், நாமக்கல் ஜெட்டிக்குலத் தெருவைச்
சேர்ந்த பொன்னர் (30) எனத் தெரியவந்தது. மேலும், மாணவியின் காதில் தங்கத்
தோடு அணிந்திருப்பதாக நினைத்து, அதைப் பறிக்க கடத்த முற்பட்ட விவரமும்
போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வாலிபரிடம் தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் பொன்னர், ஏற்கனவே பிக்பாக்கெட்
வழக்கில் போலீஸில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.