உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாட்டியை கத்தியால் குத்திக்கொன்ற போதை பேரன் தற்கொலை முயற்சி

பாட்டியை கத்தியால் குத்திக்கொன்ற போதை பேரன் தற்கொலை முயற்சி

ப.வேலுார்:-வேலகவுண்டம்பட்டி அருகே, மது போதையில் பாட்டியை கத்தியால் குத்திக்கொன்ற, 16 வயது பேரன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே, கொண்டாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர், 70 வயது மூதாட்டி. இவர், தன் தோட்டத்தில் மகன் மற்றும் 16 வயது பேரனுடன் வசித்து வந்தார். சிறுவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த, 18ல் சிறுவன், தன் பாட்டி வைத்திருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச்சென்று மது குடித்துள்ளார். அன்று மாலை, தன் மகனிடம், பேரன் பணத்தை திருடியது குறித்து மூதாட்டி தெரிவித்துள்ளார்.இதனால், அன்று இரவு மது போதையில் வந்த சிறுவனை, அவரது தந்தை அடித்து விரட்டியுள்ளார். பின், சிறுவனின் தந்தை வீட்டிற்குள்ளும், பாட்டி வீட்டிற்கு வெளியேயும் கட்டிலில் படுத்து துாங்கினர். இரவு, 10:30 மணிக்கு, மீண்டும் மது குடித்துவிட்டு வந்த சிறுவன், வீட்டிற்கு வெளியே கட்டிலில் துாங்கிக்கொண்டிருந்த பாட்டியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். அதிகாலை எழுந்த மகன், மூதாட்டி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் போலீசாருக்கு தெரிவிக்காமல், மூதாட்டி உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார், 19 காலை மூதாட்டி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணைக்கு பயந்த சிறுவன், மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக, நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதையறிந்த போலீசார், நேற்று முன்தினம், சிறுவன் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்று, அவரை பிடித்து விசாரித்தனர். அதில், பாட்டியை கொலை செய்ததை சிறுவன் ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை கைது செய்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !