31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: சங்க பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு
நாமக்கல்: 'நாமக்கல்லில், வரும், 31ல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், வரும், 31 காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். அதில், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். மேலும், கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.