நாமக்கல் : 'வேலைவாய்ப்பு, கல்வி, வியாபாரத்திற்காக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழர்கள், அயலகத்தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராகி நலத்திட்ட உதவிகள் பெற்று பயன்பெறலாம் என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வியாபாரத்திற்காக வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வாழும் தமிழர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் உத்தரவின்படி, 'அயலகத் தமிழர் நல வாரியம்' அமைக்கப்பட்டுள்ளது.அவ்வாரியம் மூலம், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 18 முதல், 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் இணையதளத்தில் ஒரு முறை பதிவு கட்டணமாக, 200 ரூபாய் செலுத்தி, இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறலாம்.இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அயலகத் தமிழர் (வெளிநாடு): இந்திய பாஸ்போர்ட் மற்றும் தகுந்த ஆவணங்களுடன், அயல்நாடுகளில் பணிபுரியும் மற்றும் கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் எமிக்ரேஷன் கிளியரன்ஸ் பெற்று அயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராகலாம்.ஆறு மாதத்திற்கு மேல் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், வெளிமாநில அயலகத் தமிழர் வெளிமாநில பிரிவில் உறுப்பினராகலாம். உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் வகையில், கடந்த, 15 முதல், வரும் ஆக., 18 வரையிலான, மூன்று மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு, பதிவு கட்டணம், 200 ரூபாய் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு பெற்ற நபர்கள், வாரியத்தின் மூலம் விபத்து இன்சூரன்ஸ், பல்வேறு நோய்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் போன்றவற்றை மிக குறைந்த பதிவு கட்டணம் செலுத்தி தேர்வு செய்துகொள்ளலாம். கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு வேலைக்காக சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்திலுள்ள மகன், மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) அவர்களின் கல்வி நிலைக்கேற்ப கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக பழங்குடியின பிரிவினர் குறைந்தபட்சம், 5ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பிற பிரிவினர், குறைந்தபட்சம், பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.இத்திட்டம் குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்துகொண்டு, உறுப்பினராக கட்டணமில்லா உதவி எண்: 18003093793 (இந்தியாவிற்குள்), 80690 09901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். 80690 09900 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தும் விபரங்கள் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.