உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெல்லில் மகசூலை அதிகரிக்க நாமக்கல் வேளாண்துறை யோசனை

நெல்லில் மகசூலை அதிகரிக்க நாமக்கல் வேளாண்துறை யோசனை

நாமக்கல், டிச. 2-'நெல் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற, துத்தநாக சல்பேட் எனும் நுண்ணுாட்ட உரத்தை பயன்படுத்த வேண்டும்' என, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மழைக்காலங்களில் மேட்டுப்பகுதிகளை விட, நீர் தேங்கியுள்ள பகுதிகளில், மண்ணில் துத்தநாக சத்து பற்றாக்குறை ஏற்படுவதால், நெற்பயிரில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. துத்தநாக சத்து நெற்பயிரில் மாவுச்சத்து உருமாற்றத்துக்கும், பயிர் வளர்ச்சிக்கும் தேவையான, இன்டோல் அசிட்டிக் அமிலம் உற்பத்தி செய்ய உதவுகிறது. இது கிரியா ஊக்கியாகவும், மற்ற நுண்ணுாட்டசத்துகளை பயிர் சரியான முறையில் பயன்படுத்திடவும், பயிர்கள் நீரை சீராக எடுத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதனால், நெற்பயிரில் பதர் நெல் குறைந்து, மகசூல் அதிகரிக்கிறது.இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு நிற புள்ளிகள் காணப்பட்டு, வளர்ச்சி தடைபட்டு நெற்பயிர் சீராக இல்லாமல் காணப்படுவதே துத்தநாக சல்பேட் பற்றாக்குறையின் அறிகுறியாகும்.இலைகளின் அளவு சிறுத்தும், நுனிப்பகுதி பச்சையாகவும், நடுப்பகுதி வெளிர் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். இலைகளை மடித்தால், ஒடியக்கூடியதாக இருக்கும். துார் உற்பத்தி குறைவாக காணப்படும். நெற்பயிரில் துத்தநாகச்சத்து பற்றாக்குறையே, கெய்ரா நோய் எனப்படும்.பயிர் நடவு செய்யும் போது, துத்தநாக சல்பேட் ஏக்கருக்கு, 10 கிலோவை, 20 கிலோ மணலுடன் கலந்து சீராக மேற்பரப்பில் இட வேண்டும். மேலும், துத்தநாக சத்து பற்றாக்குறை காணப்படும் இடங்களில், 500 கிராம் ஜிங்க் சல்பேட் நுண்ணுாட்ட உரத்தை, 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கலாம்.மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், சம்பா நெல் சாகுபடியில் உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ துத்தநாக சல்பேட் மானியத்தில் வழங்கப்படுகிறது. நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் தேவையான அளவு துத்தநாக சல்பேட் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் துத்தநாக சல்பேட் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி