உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்

ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்

ராசிபுரம்: பொது பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, பாதிக்கப்பட்டவர்கள் கால்நடைகளுடன் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் கார்கூடல்பட்டி கிராமம், பில்லிப்பாக்குட்டை அடுத்த சமத்துவபுரம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில் உள்ள, 5 குடும்பங்களுக்கு செல்லும் பொது பாதையை அதே பகுதியை முருகேசன், 55, என்பவர் கற்களை வைத்து மறித்து அடைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும், 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேளாண் பொருட்களை கொண்டு செல்ல முடியாமலும், அத்தியாவசிய தேவைகளுக்கு நகருக்கு செல்ல முடியாமலும் கடந்த சில நாட்களாக தவித்து வந்தனர். இதுகுறித்து தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் விரக்தியடைந்த, 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள், நேற்று காலை தங்களது கால்நடைகளுடன் ராசிபுரம் தாலுகா அலுவலகம் சென்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் டி.எஸ்.பி. விஜயகுமார், தாசில்தார் சசிகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது 'ஆக்கிரமிப்பு குறித்து நேரில் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பின்னர் டி.எஸ்.பி., மற்றும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி