நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், படுகாயமடைந்து சாலையோரம் மயங்கி கிடந்த இளம்பெண்ணை மீட்டு, அவரது காதலனை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.நாமகிரிப்பேட்டை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியில், நேற்று முன்தினம் காலை, சாலையோரம், 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் படுகாயத்துடன் மயங்கி கிடந்தார். அவ்வழியாக வந்த விவசாயிகள், பாடுகாயமடைந்த பெண்ணை பார்த்ததும், போலீசாருக்கும், 108 அவசரகால ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பின், படுகாயமடைந்த இளம்பெண்ணை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து பகுதியில் கிடந்த மொபைல் போனை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த இளம்பெண், கொல்லிமலை, செங்கரையை சேர்ந்தவர் என்றும், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.அப்பெண்ணின் பெற்றோர், நாமகிரிப்பேட்டை அடுத்த தண்ணீர்பந்தல்காட்டில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வசித்து வந்துள்ளனர். கடந்த, 14ல் வீட்டுக்கு வந்த இளம்பெண், இரவு, 10:00 மணிவரை வீட்டில் யாருடனோ மொபைல் போனில் பேசியுள்ளார். அதன்பின், வீட்டருகே வந்த ஆண் நண்பருடன், பெற்றோருக்கு தெரியாமல் வெளியே சென்றுள்ளார். மெட்டாலா பகுதிக்கு சென்றுவிட்டு இரவு, 12:00 மணிக்கு மேல் திரும்பி வரும் போது தான் விபத்து நடந்துள்ளது.இளம்பெண்ணை அழைத்து வந்த ஆண் நண்பர், அவர் இறந்துவிட்டதாக கருதி சாலையோரம் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் கிடந்த ஏ.டி.எம்., கார்டு, மொபைல் எண்ணை வைத்து, போலீசார் அந்த ஆண் நபரை தேடி வருகின்றனர்.