தீயில் கருகிய மனைவி காப்பாற்றிய புதுமாப்பிள்ளை பலி
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், கபிலர் மலையை சேர்ந்தவர் சுரேஷ், 28, சமையல் கான்ட்ராக்டர். இவரது மனைவி துர்கா, 20. இருவருக்கும், கடந்த, 11ல் திருமணம் நடந்த நிலையில், 14ல் வீட்டில் சமையல் செய்ய, துர்கா காஸ் அடுப்பை பற்ற வைத்தார். ஆனால், எரியாததால், சுரேஷ் உதவிக்கு சென்று அடுப்பை பற்ற வைத்தார். அப்போது, காஸ் கசிவு ஏற்பட்டு சுரேஷ் மீது தீப்பற்றியது.அதிர்ச்சியடைந்த துர்கா, கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பற்றியது.புதுமண தம்பதியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து இருவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் படுகாயமடைந்த சுரேஷ், நேற்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் இறந்தார். துர்கா, தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். தீவிபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமான, எட்டு நாளில் புது மாப்பிள்ளை பலியானது, உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.