ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் திருத்த பயிற்சி
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பயிற்சி வகுப்பு நடந்தது.வரும், 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ள, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அதன்படி, பள்ளிப்பாளையம் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று மாலை, 6:00 மணிக்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பயிற்சி வகுப்பு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில், அனைத்து வாக்காளர்களுக்கும், அந்தந்த பி.எல்.ஓ.,க்கள் (ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்), வீடு தேடிச்சென்று, தீவிர திருத்தத்துக்கான படிவம் வழங்க வேண்டும்.வாக்காளர்கள் அந்த படிவத்தில் கையெழுத்திட்டு, தேர்தல் கமிஷன் குறிப்பிடும், 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில், வாக்காளர் வரைவு பட்டியல் தயாரிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு, இதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ், வருவாய் துறை அதிகாரிகள், 198 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.