லாரியை முந்த முயன்றபோது விபத்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி 2 பேர் பலி
நாமக்கல்,லாரியை முந்திச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், கல்லுாரி மாணவர் உள்பட, இரண்டு பேர், சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி கிழக்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் யோகேஷ், 20; கோழித்தீவன ஆலையில் பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர், நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, பழனியாண்டி தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் பரத், 17. இவர், நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., சி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, யோகேஷ் தன் நண்பர் பரத்தை, 'யமஹா ஆர்15' டூவீலரில் அழைத்துக்கொண்டு, நாமக்கல், முதலைப்பட்டியில் உள்ள டீ கடைக்கு சென்றார். அங்கு டீ குடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, கருங்கல்பாளையம் அருகே முன்னால் சென்ற லாரியை, யோகேஷ் முந்திச்செல்ல முயன்றார். அப்போது, லாரியின் பின்புறம் டூவீலர் மோதியதில், சறுக்கி விழுந்து சக்கரத்தில் சிக்கினர். இந்த விபத்தில் உடல் நசுங்கி, இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் வாலிபர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.