உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் தேர்த்திருவிழா 1,000 பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

கோவில் தேர்த்திருவிழா 1,000 பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

மோகனுார் :வாழவந்தி மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.மோகனுார் அடுத்த எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு விழா, கடந்த, 29ல், கோவில் பின்புறம் உள்ள சிங்கார பாறையில் உள்ள பாலியில், நீராடப்பட்டு கம்பம் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த, 5 முதல், தினமும் இரவு, 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், தினமும், காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டனர்.நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், தீ குண்டம் அமைக்கும் பூஜையும் நடந்தது. அதையடுத்து, மதியம், 1:00 மணிக்கு, பாலப்பட்டி கொமராபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்ற, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி, 5. கி.மீ., துாரம் நடந்து சென்று, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இன்று காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, சுவாமி திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !