ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று பிரித்து அனுப்பப்பட்டது.நீலகிரியில் மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், 689 ஓட்டுசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊட்டி தொகுதியில் அமைக்கப்பட்ட, 239 ஓட்டு சாவடி மையங்களுக்கு, 286 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், 310 வி.வி.,பேட் கருவிகள் ஊட்டி பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டது. கூடலுார் தொகுதிக்கு, 224 ஓட்டுசாவடி மையங்களுக்கு, 268 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், 291 வி.வி.,பேட் கருவிகள் கூடலூர் புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டது. குன்னூர் தொகுதியில் அமைக்கப்பட்ட, 226 ஓட்டு சாவடி மையங்களுக்கு, 271 மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், 293 வி.வி.,பேட் கருவி குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது. தேர்தல் பிரிவு அதிகாரி கூறுகையில்,'கணினி வழியில் குலுக்கல் முறையில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாகனங்களில் அனுப்பபட்டது. இவை, அந்தந்த சட்டசபை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' இருப்பு வைக்கப்பட்டு, சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்,'பேலட் ஷீட்' அச்சிடப்பட்டு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படும். அதன்பின், அந்தந்த ஓட்டுசாவடிகளுக்கு அனுப்பப்படும்,' என்றார்.
துணை ஓட்டு சாவடி மையங்கள் இல்லை!
நீலகிரி மூன்று தொகுதிகளில், 689 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள ஓட்டுசாவடிகளில், துணை ஓட்டு சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, நீலகிரியில், 1,500 வாக்காளர்களுக்கு குறைவான ஓட்டு சாவடி இருப்பதால், இந்த மூன்று தொகுதிகளில் துணை ஓட்டு சாவடி மையங்கள் இல்லை.