புலிகள் இறந்த பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தி கண்காணிப்பு
கூடலுார்; முதுமலை, நெலாகோட்டை வனச்சரகத்தில் புலிகள் இறந்த பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம், நெலாகோட்டை வனச்சரகத்தில், சில நாட்களில் இரண்டு புலிகள் தனித்தனியே இறந்துள்ளன. இதற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.முதுமலை துணை இயக்குனர் வித்யா கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பகம் மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ளதால், புலிகள் எண்ணிக்கை அதிகம். மேலும், கேரள வயநாடு வன உயிரின சரணாலயம்; கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஒட்டி அமைந்துள்ளதால், அங்குள்ள புலிகள் எல்லை தாண்டி, இங்கு வரும் போது சண்டையிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், டிச., முதல் பிப்., வரை புலிகள் இனப்பெருக்க காலமாகும்.நெலாக்கோட்டை வனச்சரகத்தில், இந்த வாரம் தனித்தனியே, 5 வயது பெண் புலி, 10 வயது ஆண் புலி இறந்துள்ளன. அதில், 5 வயது பெண் புலி, புலிகள் காப்பக கணக்கெடுப்பில் தென்படாத புலியாகும். இறந்த புலிகளின் உடல் பாகங்கள் அப்பகுதியிலேயே இருந்ததும். முதல் கட்ட விசாரணையில், 'புலிகள் இறப்புக்கு சந்தேகப்படும் தடயங்கள் ஏதும் தென்படவில்லை,' என, கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். தடயவியல் ஆய்வுக்காக இதன் உடல் மாதிரிகள் கோவை வட்டார தடயவியல் ஆய்வகத்துக்கும், சென்னை உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் வன உயிரின குற்ற வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தானியங்கி கண்காணிப்பு கேமராகள் பொருத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.