அன்னுார் : 'குடிநீரில் கோழி கழிவு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை கண்டிக்கிறோம்,' என்று கூறி, ஒன்றிய குழு கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நான்கு மாதங்களுக்கு பிறகு நேற்று ஒன்றிய அலுவலகத்தில் துவங்கியது. ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியவுடன் பா.ஜ., கவுன்சிலர் ஜெயபால் பேசுகையில், 'மேல்நிலைத் தொட்டிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தப்படுத்துவதில்லை. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள ஊராட்சிகளில் முழுமையாக ஆய்வு செய்வதில்லை' என்றார்.ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி பேசுகையில், 'மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் ஒரு தொட்டியில் குடிநீரில் கோழிக்கழிவு சேறு கலந்து வருகிறது. இது குறித்து கேட்டாலும் ஒன்றிய அலுவலகத்தில் உரிய பதில் இல்லை' என்றார். அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபு பேசுகையில், 'ஒவ்வொரு ஊராட்சியிலும் பழைய அங்கன்வாடி கட்டடங்கள் இடித்து அகற்றப்படுகிறது. இதுகுறித்து முழுமையான தகவல் தெரிவிப்பதில்லை' என்றார்.வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் பேசுகையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் நாட்குறிப்பு கூட்ட முடிவில் வழங்கப்படும், என்றார்.எனினும் ஒன்றிய கவுன்சிலர்கள், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதான புகார் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மட்டுமே பதிலளிப்பதாலும் உரிய பதில் கிடைக்காததாலும் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க.,வைச் சேர்ந்த நான்கு கவுன்சிலர்கள் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை. ஒன்றிய கவுன்சிலர்கள் அளித்த பேட்டியில், 'அதிகாரிகள் ஊராட்சிக்கு ஆய்வுக்கு வந்தால் ஒன்றிய கவுன்சிலருக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அலட்சியப்படுத்துகின்றனர். தங்களுடைய பணி குறித்த நாட்குறிப்பு கேட்டால் தர மறுக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம்,' என்றனர். 'ஒன்றிய கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் ஆரம்ப கட்ட பணி தொடங்கி விடுவதால் வளர்ச்சி பணி செய்ய முடியாது. இந்த சூழ்நிலையில் அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஊராட்சிகளில் வளர்ச்சி பணி பாதிக்கப்படும்,' என பொதுமக்கள் தெரிவித்தனர்.
கவுன்சிலர்களை கண்டித்து, அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கவுன்சிலர்களை கண்டித்து மதிய உணவு இடைவேளையில், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் பேசுகையில், 'பெண் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை மரியாதை குறைவாக சில கவுன்சிலர்கள் பேசுகின்றனர். மேலும் நாட்குறிப்பை உடனே வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். தகாத வார்த்தைகளால் பேசக்கூடாது என தெரிவித்ததற்கு அதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர்.அரசு அலுவலர்களுக்கு உரிய மதிப்பு தராமல், ஒன்றிய குழு கூட்டத்தில் அவமானப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது' இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் அலுவலர்களை அவமரியாதையாக பேசும் சில கவுன்சிலர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.