சேதமடைந்த சாலை:சிரமத்தில் மாணவர்கள்
கூடலுார்;கூடலுார், புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை, சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.கூடலுார், புளியம்பாறையில் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கும், அதனை ஒட்டிய கிராமத்துக்கு, புளியம்பாறை சந்திப்பில் இருந்து, சாலை பிரிந்து செல்கிறது. ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் இச்சாலையில், பாதி அளவு சிமென்ட் சாலையும், மீதமுள்ள பகுதி தார் சாலையும் அமைத்துள்ளனர். சாலையில் பெரும்பகுதி சேதமடைந்து சீரமைக்கப்படவில்லை. சாலையில் வாகனங்கள் இயக்கவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது, பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சாலை மேலும் சேதமடைந்து போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'இச்சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், சேதமடைந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையில் சேதமடைந்துள்ளது. வாகனங்கள் இயக்கவும், மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, சீரமைக்க வேண்டும்,' என்றனர்.