ஊட்டி:'நீலகிரி தொகுதி வாக்காளர்கள் இன்று நடக்கும் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி லோக்சபா தொகுதி, 'ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர்,' ஆகிய ஆறு தொகுதிகளை உள்ளடக்கியது.இங்கு,'6 லட்சத்து 83 ஆயிரத்து 21 ஆண் வாக்காளர்கள்; 7 லட்சத்து 35 ஆயிரத்து 797 பெண் வாக்காளர்கள், 97 மூன்றாம் பாலினத்தவர்,' என, மொத்தம், 14 லட்சத்து 18 ஆயிரத்து 915 வாக்காளர்கள் உள்ளனர்.மொத்தமுள்ள, ஆறு தொகுதிகளில், 'ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய தொகுதிகளில், 689 ஓட்டு சாவடி; சமவெளி பகுதிகளான, மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில், 930 ஓட்டு சாவடிகள்,' என, மொத்தம், 1,619 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஊட்டி தொகுதியில், '23 நுண் பார்வையாளர்கள், கூடலுார் தொகுதியில், 67 நுண் பார்வையாளர்கள், குன்னுார் தொகுதியில், 37 நுண் பார்வையாளர்கள்,' என, 127 நுண் பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆறு தொகுதிகளுக்கு எடுத்து செல்லும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 65 வகையான பொருட்கள் அந்தந்த தொகுதியில் உள்ள ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் தயார்படுத்தப்பட்டு, ஓட்டு சாவடிகளுக்கு செல்லும் வாகனங்களில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஆவணங்களில் ஒன்று போதும்:
ஓட்டு பதிவு செய்ய, 'ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, போட்டோவுடன் கூடிய வங்கி, தபால் அலுவலக கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கிய மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஸ்மார்ட் அட்டை போதுமானது.மேலும், பாஸ் போர்ட், போட்டோவுடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பொது நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான போட்டோவுடன் கூடிய பணி அடையாள அட்டை, மாற்று திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு வந்து ஓட்டுப்பதிவு செய்யலாம். தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ' லோக்சபா தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனாநாயக கடமை ஆற்ற வேண்டும்,' என்றனர்.
176 பதட்டமானவை
நீலகிரி லோக்சபா தொகுதியில், 176 ஓட்டுசாவடி மையங்கள் பதட்டமானவை என, கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 'வெப் கேமரா' பொருத்தப்பட்டு, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 170 ஜோனல் டீம் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள ஓட்டு சாவடிக்கு வாக்காளர்கள் செல்ல வனத்துறை மூலம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.