| ADDED : ஜூலை 21, 2024 07:02 AM
குன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுார் கொலக்கம்பை பகுதிக்கு, குட்டியுடன் ஐந்து காட்டு யானைகள் சமவெளி பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு கொலக்கம்பை, கிரேக் மோர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை உடைத்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சூறையாடிச் சென்றன.கொலக்கம்பையில் இரு வீடுகளை சேதப்படுத்தின. நள்ளிரவு முழுதும் அதே பகுதிகளில் முகாமிட்டிருந்த காட்டு யானைகளை, ஊர்மக்கள், வனத்துறையினர் இணைந்து வனத்திற்குள் விரட்டினர். வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கிராம மக்கள் கூறுகையில், 'இங்குள்ள குறுகலான சாலைகளில் யானைகள் எதிரே நிற்பது தெரியாததால் வாகனங்களில் செல்வோரை தாக்கும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து ரேஷன் கடை, வீடுகளை சேதப்படுத்தி செல்வதால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்' என்றனர்.