முதுமலை காப்பகத்தில் பெண் புலி உயிரிழப்பு
பந்தலுார், ; முதுமலை புலிகள் காப்பகம் நெலாக்கோட்டை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பெண்ணை, கொத்தமடவு வனப்பகுதியில் புலி ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. முதுமலை காப்பக துணை இயக்குனர் வித்யா, வனச்சரகர் கணேசன் தலைமையிலான வன குழுவினர் அப்பகுதியில் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், கால்நடை டாக்டர் சுகுமாரன் தலைமையிலான குழுவினர் உயிரிழந்த புலிக்கு பிரேத பரிசோதனை செய்தனர். அதில், புலி நெஞ்சு பகுதியில் காயம் இருந்ததுடன், உட்பகுதியில் ரத்த கசிவுகளும் காணப்பட்டது. புலி கடந்த சில நாட்களாக உணவு உட்கொள்ளாத நிலையில், அதன் இரைப்பையில் அதிக அளவில் குடல் புழுக்களும் இருந்துள்ளன. புலியின் உடல் பாகங்கள் ஆய்வுக்கு சேகரிக்கப்பட்ட நிலையில் மற்ற பாகங்கள் அதே பகுதியில் எரியூட்டப்பட்டது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.