சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் வன உயிரினங்களுக்கு ஆபத்து
கூடலுார்;நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும்; பயன்படுத்தவும் தடை உள்ளது.வருவாய்த் துறையினர் அவ்வப்போது கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருள்கள், தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர்.வெளிமாநிலங்களில் இருந்து வரும், சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை, மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்து வருகின்றனர். தற்போது இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.கேரளாவில் இருந்து, நாடுகாணி வழியாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், எடுத்து வரும் உணவை, கீழ்நாடுகாணி அருகே சாலையோரம் உள்ள சிமென்ட் தடுப்புகள் மீது அமர்ந்து உட்கொள்கின்றனர். தொடர்ந்து, உணவு எடுத்து வர பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை வனத்தை ஒட்டிய சாலையோர வனங்களில் வீசி செல்கின்றனர். இதனால், வனச்சூழல் பாதிக்கப்படுகிறது. உணவு கழிவுடன் 'பிளாஸ்டிக்' பைகளை உட்கொள்ளும் வன உயிரினங்களும் இறக்கும் நிலை ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் சாலையோரம், பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதால், வனச் சுற்றுச்சூழலுக்கு மண் வளத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இவைகளை உடனடியாக அகற்றுவதுடன், சாலையோரங்களில் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை மீண்டும் வீசி செல்வதை தடுக்க வேண்டும். இங்கு தடுப்பு அமைக்க வேண்டும்,' என்றனர்.