ஊட்டி பூண்டு கிலோ ரூ.100 வரை விற்பனை; விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
குன்னுார்; ஊட்டி பூண்டு கிலோ, 100 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட் போன்ற மலை காய்கறிகளுக்கு அடுத்தபடியாக ஊட்டி பூண்டு அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஊட்டி பூண்டின் காரத்தன்மையால் வட மாநிலங்களில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஊட்டி பூண்டு விலை குறைந்தபட்சம் கிலோவிற்கு, 200 முதல் அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போனது. இந்நிலையில், நேற்று மேட்டுப்பாளையம் ஏல மண்டியில் நடந்த ஏலத்தில், குறைந்தபட்சமாக, 70 முதல் அதிகபட்சமாக, 100 ரூபாய் என ஏலம் போனது. விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் கூறுகையில்,''கடந்த மாதம் ஊட்டி பூண்டு வரத்து துவங்கியது.இந்த மாதம் எல்லா பகுதிகளிலும் வரத்து அதிகரித்துள்ளதால், விலையில் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.