| ADDED : ஜூலை 02, 2024 01:59 AM
கோத்தகிரி:கோத்தகிரியில் பசுந்தேயிலை பறித்து கொண்டு இருந்த பெண் தொழிலாளி, தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்ததால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது கோத்தகிரி பரவக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மல்லிகா,50. இவர் நேற்று முன்தினம் தேயிலை தோட்டத்தில் பசுந்தேயிலை பறித்து கொண்டிருந்த போது, செடியின் மேல் கருமையான நிறத்தில் இருந்த பாம்பு கடித்துள்ளது. அவர் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையின் போது, கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக, திடீரென ஒரு பையை எடுத்த அவர், அதனுள் இருந்த பாம்பை டாக்டர்களிடம் காண்பித்துள்ளார். அப்போது, ஒரு பெண் டாக்டர் ஓட்டம் பிடித்துள்ளார்.இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து பையுடன் அதனை வாங்கி வைத்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மல்லிகாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர். வன ஊழியர்கள் லோகேஷ் குமார், ராஜேஷ் குமார், பொன்னமலை, சேதுபதி மற்றும் தருண் குமார் ஆகியோர் மருத்துமனைக்கு வந்து, பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'விஷத்தன்மை கொண்ட அந்த பாம்பு, 'மலபார் பிட் வைப்பர்' வகையை சார்ந்தது. பாம்பு கடித்தவுடன் அவர் மருத்துவமனைக்கு வந்ததால் பிரச்னை இருக்காது. ஆனால், பாம்பை எடுத்து வந்ததால், டாக்டர்கள்; பிற நோயாளிகள் அச்சமடைந்தனர். அந்த பெண்ணுக்கு அத்தகைய அச்சம் இல்லை,' என்றனர். இந்த சம்பவத்தால், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.