| ADDED : ஜூலை 08, 2024 12:13 AM
ஊட்டி:மாவட்ட முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசுவதால் குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி கடந்த வாரத்தில் ஒரு வாரம் கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கன மழை பெய்தது. மாவட்டத்தில் ஊட்டி, குந்தா, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. தென் மேற்கு பருவமழையின் சராசரி அளவு, 60 செ.மீ., ஆகும். இதுவரை, 15 செ.மீ., மழை பெய்துள்ளது.கடந்த மூன்று நாட்களாக மாவட்ட முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசுகிறது. காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்கிறது. சில இடங்களில் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்ட பெயர் பலகைகள் பலத்த காற்றுக்கு விழுந்துள்ளது.கிண்ணக்கொரை, கோரக்குந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி சாலைகளில் ஆங்காங்கே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. நெடுஞ்சாலை துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மரங்களை 'பவர்ஷா' உதவியுடன் அறுத்து அகற்றினர். குளிரான கால நிலை நிலவுவதால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.