ஊட்டி:ஊட்டி அழகர்மலை பகுதியில் நடைபாதை உட்பட அடிப்படை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை மக்கள் தொட்டில் கட்டி சுமந்து செல்லும் அவலம் தொடர்கிறது.ஊட்டி ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்மலை கிராமத்தில், 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலானோர், அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று குடும்பங்களை நகர்த்தி வருகின்றனர்.கிராமத்தில், தண்ணீர், நடைபாதை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. 'செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு, நடைபாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்,' என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையில், மக்கள் பயன்படுத்தி வந்த ஒற்றையடி மண் பாதை சரிந்து விழுந்துள்ளது. இதனால், மக்கள் நடந்து செல்ல முடியாமல் வழுக்கி விழுந்து வருகின்றனர். இந்நிலையில், கிராமத்தில் மூர்த்தி என்பவர் இறந்துள்ளார். பாதை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை, நேற்று உறவினர்கள் மூங்கில் தொட்டில் கட்டி, ஒருவர் பின் ஒருவராக நகர்ந்து, ஆபத்தான இடத்தை கடந்து, மயானத்திற்கு கொண்டு சென்றனர். இதனை பார்த்த அவரின் உறவினர்கள் கதறி அழுதனர். ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக, கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அழகர் மலை கிராம மக்களை ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்துள்ளது, இந்த சம்பவத்தின் மூலம் ஊர்ஜிதமானது.
40 ஆண்டுகளாக அவதி...!
ஊட்டி அழகர்மலை பகுதியை சேர்ந்த லீலாவதி கூறுகையில், ''கடந்த 40 ஆண்டுகளாக, எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு மனுக்கள் அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. 700 குடும்பத்தினர் மோசமான நடைபாதையில், சென்றுவர முடியாத நிலை உள்ளது. கடந்த காலங்களில், சுமந்து சென்ற போது, இரண்டு உடல்கள் விழுந்துள்ளன. தற்போது, மழை பெய்து வருவதால், இறந்தவரின் உடலை, அதிக சிரமத்துடன் கொண்டு சென்றுள்ளோம். ஊராட்சி நிர்வாகம், நடைப்பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்,'' என்றார்.