| ADDED : ஜூலை 24, 2024 11:42 PM
ஊட்டி : ஊட்டி- பைக்காரா சாலையில் மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழை சற்று ஓய்ந்தது. கடந்த மூன்று நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் பலத்த காற்று வீசுகிறது. பலத்த காற்றுக்கு மாவட்டம் முழுவதும், 140 மரங்கள் விழுந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. 'சாலையோரம், குடியிருப்பு மற்றும் பள்ளி அருகே அபாயகரமாக உள்ள மரங்களை தாமதிக்காமல் ஆய்வு மேற்கொண்டு அகற்ற வேண்டும்,' என, நேற்று முன்தினம் நடந்த ஆய்வு கூட்டத்தில் எம்.பி., ராஜா மற்றும் அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர். அதற்கான பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் ஆயத்தமாகியுள்ளது. இந்நிலையில், நேற்று குந்தா, ஊட்டி, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் காலை முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. பகல் நேரங்களில் கடும் மேகமூட்டம் தென்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர். ஊட்டி - பைக்காரா சாலை சூட்டிங் மட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மரத்தை அகற்றிய பின், ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.