| ADDED : மே 05, 2024 12:17 AM
கோத்தகிரி:கோவை, சித்தாபுதுார் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பத்தினர் ஒன்பது பேர், நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இயற்கை காட்சிகளை கண்டுகளித்த அவர்கள், கோத்தகிரி தாந்தநாடு பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினர்.நேற்று மாலை, அனைவரும் கோத்தகிரி ஹாடாதொரை பகுதிக்கு சென்று, அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளித்தனர். அப்போது மழை பெய்த நிலையில் கூட்டில் இருந்து வெளியேறிய குளவிகள் அவர்களை கொட்டியது. அலறியடித்து ஓடியவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், படுகாயமடைந்த ராஜசேகர், 56, கார்த்திகேயன், 54, இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.