அனுமதி பெறாத விளம்பர பலகைகள் 3 நாளில் அகற்ற வேண்டும்; கமிஷனர்
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதி இல்லாமல் வைத்துள்ள, விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை, மூன்று தினங்களுக்குள் அகற்ற வேண்டும் என, நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், செயல்படும் வணிக நிறுவனங்கள், தங்களது கடையின் பெயர்ப் பலகையினை, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 பிரிவு 327-ல் தெரிவித்துள்ளபடி நிறுவப்பட்டிருந்தால், உரிமம் பெறுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் ஒரு பெயர் பலகைக்கு மேல் வைக்க வேண்டுமானால், முறையாக அனுமதி பெற்ற பின்பு, வைக்கப்பட வேண்டும். எனவே கூடுதலாக பெயர் பலகை வைத்துள்ள, விளம்பர நிறுவனங்கள், மூன்று தினங்களுக்குள் அவற்றை அகற்றி விட வேண்டும். விளம்பர பலகையை நிறுவுவதற்கு முன், விளம்பர நிறுவனம், நகராட்சியிடம் உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதை, கட்டட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை, உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் கட்டடத்தின் உரிமையாளர்கள் மீது, கட்டட அனுமதி சட்ட விதிகளின்படி, சட்ட நடவடிக்கை தொடரப்படும். மேலும் நீதிமன்ற வழக்கு தொடர்புடைய விளம்பர பலகைகள் மற்றும் உரிமம் பெறப்பட்ட விளம்பர பலகைகளை தவிர, இதர அனுமதி இல்லாமல் வைத்துள்ள விளம்பர பலகைகளை, சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள், அடுத்த மூன்று தினங்களுக்குள் கட்டுமானத்துடன் அகற்ற வேண்டும். விளம்பர நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், விதிகளுக்கு மாறாக வைத்துள்ள விளம்பரப் பலகைகளை அகற்றவும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) விதிகள், 2022 பிரிவு 177 Qன் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த விளம்பர பலகையை கட்டுமானத்துடன் நகராட்சியால் அகற்றப்படும். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்தின் மீது, காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என, தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கமிஷனர் அறிக்கையில் கூறியுள்ளார்.