உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீராதாரங்கள் மாசு; வன விலங்குகளுக்கு ஆபத்து: கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்

நீராதாரங்கள் மாசு; வன விலங்குகளுக்கு ஆபத்து: கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்

குன்னுார்: 'நீலகிரி மாவட்ட வனங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, உள்ளாட்சி துறையுடன் இணைந்து, வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 1,426 சதுர கி.மீ., பரப்பளவு வனப்பகுதி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வனங்கள் அதிகமாக உள்ள நீலகிரியில் ஒருபுறம், தேயிலை தோட்டங்களின் அருகேயுள்ள வனங்கள்; வருவாய்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது.மறுபுறம் தேயிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டு, கட்டட காடுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதை தவிர, குப்பைகள் கொட்டும் இடமாக வனங்கள், நீரோடைகள், நீர் பிடிப்பு பகுதிகள் மாறி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அதில், குறிப்பாக, சிறுத்தை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்டவை அதிகமுள்ள, குன்னுார்டைகர் ஹில், சி.எம்.எஸ்., பந்துமை உள்ளிட்ட வனப்பகுதிகளில் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு தடுப்பணையை சுற்றியுள்ள வனப்பகுதிகளில்,மது மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட குப்பைகளை இரவு நேரங்களில் வாகனங்களில் வந்து கொட்டி செல்கின்றனர்.மேலும், வனப்பகுதிகளில் உற்பத்தியாகும் நீர் ஓடைகள் வழியாக, குன்னுார் வழியாக பவானி ஆற்றில் கலக்கும் நிலையில், இவற்றில் இரவு நேரங்களில் குப்பை கொட்டுவதால், அதன் பாதிப்பு சமவெளி பகுதிகள் வரை சென்று, வன உயிரினங்களுக்கும், விவசாய உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கடும் நடவடிக்கை அவசியம்

குன்னுார், ஊட்டி, கூடலுார், பந்தலுார், கோத்தகிரி பகுதிகளில், திடகழிவு மேலாண்மை திட்டத்தின் படி, மட்கும், மட்காத குப்பைகளை பிரித்து வழங்க உள்ளூர் மக்களின் ஆதரவுடன் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வனப்பகுதியில், கழிவுகளை கொட்டுவோர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இதற்கான பணிகள் துவக்கப்படாமல் இருந்தால், கோடை சீசனின் போது, மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், தனியார் நிறுவனங்களின் குப்பை மேடாக மாறும் அபாயம் உள்ளது.அதில், கொட்டப்படும், 'பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள், மருத்துவ கழிவுகள், துருப்பிடித்த இரும்பு வகைகள், கட்டட கழிவுகள்,' போன்ற கழிவுகளால், வனச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், அதில் வாழும் உயிரினங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

பவானி ஆறு மாசுபடும்

'கிளீன் குன்னுார்' அமைப்பின் தலைவர் சமந்தா அயனா கூறுகையில்,''நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரின் முக்கிய கடமையாக உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு வனப்பகுதிகளில், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் உட்பட உணவு கழிவுகளை மொத்தமாக கொண்டு வந்த பகல், இரவு நேரங்களில் வாகனங்களில் கொட்டுபவர்களை கண்காணித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவற்றை நேரடியாக பெறுவதற்கான வழிமுறைகள் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், வனம்; வன உயிரினங்கள் மட்டுமல்லாமல், சமவெளி பகுதியில் உள் பவானி ஆற்றின் நீர் மாசுபடும் அபாயம் ஏற்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி