ஊட்டி: 'ஊட்டி அரசு கலைக்கல்லுாரி உருவாக காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை வைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது பல்வேறு கட்டடங்களை கட்டினர். கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன், நீலகிரியை கண்டறிந்து இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனைபோல் ஊட்டி இருப்பதை அறிந்தார். பின், இங்கிலாந்து நாட்டில் உள்ளதைபோல் பாரம்பரிய கட்டடங்களை கட்ட முடிவு செய்தார். கல் பங்களா
அதன்பின், 18ம் நுாற்றாண்டில் ஊட்டியின் முதல் கட்டடமான கல் பங்களா ஜான் சல்லீவன் என்ற ஆங்கிலேயரால் கட்டடப்பட்டது. இயற்கை எழில் மிகுந்த இடத்தில் உருவான கட்டடத்தை சுற்றி ஓக் மரங்களை நடவு செய்தார். அப்போது, கோடை காலத்தில் ஆங்கிலேயர்களின் சென்னை மாகாண தலைமை செயலகம், ஊட்டி கல் பங்களாவில் செயல்பட்டது. 1955ல் கல்லுாரியாகமாற்றம்
இங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தங்குவதற்காக, ஊட்டியில் பல குடியிருப்புகள் கட்டப்பட்டன. பின், கலெக்டர் பங்களாவாகவும் செயல்பட்டு வந்தது.ஊட்டியின் முதல் கட்டடமான கல்பங்களாவை கடந்த, 1955ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த காமராஜர், அரசு கலை கல்லுாரியாக மாற்றி செயல்பட வைத்தார். அந்த கட்டடத்தில் கல்லுாரி முதல்வர் அலுவலகம், தமிழ், கணிதம் உட்பட, 5 பாடப்பிரிவுகளுக்கான வகுப்பறைகள், நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரம்பரியமிக்க கல் பங்களாவை பாதுகாக்கும் வகையில், அதனை பழமை மாறாமல் புதுப்பிக்க, மாநில அரசுக்கு கல்லுாரி சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. காமராஜர் பெயர் வைக்க மனு
தொடர்ந்து, சட்ட சபையில் நடந்த உயர்கல்வி மானிய கோரிக்கையில், 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பொது பணித்துறை மூலம் பணிகள் நடந்து வந்த நிலையில், பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பொலிவுடன் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.நீலகிரி ஆவண காப்பக மைய இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் கூறுகையில், ''ஊட்டியில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கட்டடம் கல் பங்களா ஆகும். இதனை கடந்த, 1955ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த காமராஜர், அரசு கலை கல்லுாரியாக மாற்றி செயல்பட வைத்தார். அவர் இல்லை என்றால், மலை பகுதிக்கான முதல் கல்லுாரி வர சாத்தியமில்லை. தற்போது, 'கல்லுாரியில், இளங்கலை, முதுகலை,' என, 15க்கும் மேற்பட்ட பாடப்பிரிவில், 4,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லுாரியின் பழமையான கட்டடம் புதுப்பொலிவுடன் விரைவில் திறக்கப்படும் நிலையில், முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை வைக்க, நீலகிரி ஆவண காப்பகம்; மலை மாவட்ட மக்கள் சார்பில், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதனை அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.