மரங்களில் ஆணி அடித்து வைக்கப்படும் விளம்பரம் அரசு விதிகளை மீறுவதால் பெரும் பாதிப்பு
கூடலுார்: கூடலுார் பகுதியில், சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பரங்கள் பதாகைகள் வைப்பதற்காக அடிக்கப்படும் ஆணிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கூடலுார் பகுதியில், தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகள்,பேனர்களை கடந்த காலங்களில் அதிகளவில் வைத்தன. இதனால், மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், அரசு துறையினர் ஒருங்கிணைந்து, சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஆய்வு செய்து ஆணி அடித்து வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், பேனர்களை அகற்றியதுடன், 'இது போன்ற விளம்பரங்கள் செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கைஎடுக்கப்படும்,' என, எச்சரித்தனர். இதனை தொடர்ந்து, மரங்களில் ஆணி அடித்து விளம்பர பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட்டது. ஆனால், சமீப காலமாக மீண்டும் மரங்களில் ஆணி அடித்து விளம்பர பேனர்கள் வைக்கும் விதிமீறல் அதிகரித்துள்ளது. இதற்காக, மரங்களில் அடிக்கப்படும் ஆணிகள் அப்படியே விட்டு விடுகின்றனர். இவைகளால் மரத்தின் பட்டை சேதமடைந்து மரம் பட்டுப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'மரங்களில் விளம்பர பதாகைகள் பேனர்கள் வைப்பதற்காக அடிக்கப்படும் ஆணிகளை, அப்படியே விட்டு செல்கின்றனர். அவைகளால் மரம் பாதிக்கும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே, மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதுடன், விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து, மரங்களில் விளம்பரம் செய்வதை தடுக்க அரசுத்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.