உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னூர் மலை சரிவுகளில் சமூக விரோதிகளால்... தீ பரவும் அபாயம்! கண்காணித்து கைது செய்ய வேண்டியது அவசியம்

குன்னூர் மலை சரிவுகளில் சமூக விரோதிகளால்... தீ பரவும் அபாயம்! கண்காணித்து கைது செய்ய வேண்டியது அவசியம்

குன்னுார்:குன்னுார் மலை பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளதால், ஆக்கிரமிப்பாளர், சமூக விரோதிகளால் காட்டு தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் பனிபொழிவுக்கு பிறகு, மரங்களின் இலைகள் உதிர்ந்தும், செடிகள் காய்ந்தும் வருவது வழக்கம். கடந்த, 3 ஆண்டுகளாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு டிச., இறுதியிலும், ஜன., துவக்கத்திலும் மழை பெய்ததால் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு பனி பொழிவு தாமதமாக துவங்கியது. எனினும், தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இரவில் குளிரும் நீடிக்கிறது. இதனால், இனிவரும் கோடை காலத்தில், காட்டுத்தீ அதிகரிக்கும் சூழல் உள்ளது.

கடந்த ஆண்டு 66 இடங்கள்

கடந்த ஆண்டில், குன்னுார் பகுதியில், 66 இடங்களில் பரவிய தீயை தீயணைப்பு துறையினர் கட்டுப்படுத்தினர். அதில், மார்ச் மாதத்தில் ஒரே நாளில், 4 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது.கடந்த, 2019 ஆண்டில், 119 இடங்களில் வனத்தீ ஏற்பட்டுள்ளது. 2020 முதல் 2022 வரையிலான, கோவிட் காலகட்டத்தில் மொத்தம், 71 இடங்களில் மட்டுமே தீ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, கடந்த, 2009ம் ஆண்டில், குன்னுார் சுற்றப்புற பகுதிகளில், 119 இடங்களில் தீ பரவியது.இந்நிலையில், தற்போது, கடும் வறட்சி ஏற்பட்டு, குன்னுார் மலை பகுதிகளில் தீ அதிகரிக்கும் சூழல் உள்ளதால், வனத்துறை, வருவாய் துறை, போலீசார் கண்காணித்து தடுப்பது அவசியம். குறிப்பாக, ஆக்கிரமிப்பாளர்கள், வனத்துக்கு தீ வைத்து இடத்தை பிடிக்கும் நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதனை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும்.

தீ பிடிக்க காரணம் என்ன?

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள சாலையோர வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் புகை பிடித்து வீசுவது; வனப்பகுதி அருகே வருவாய் துறை இடத்தை ஆக்கிரமிக்க தீ வைப்பது,' போன்றவை வனத்தீ ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.தீ ஏற்படும் போது, மரம்,செடி, புல், மூலிகை தாவரங்கள் அழிகிறது. மேலும், வனப்பகுதி அருகே உள்ள, சில தேயிலை எஸ்டேட்களில் பராமரிப்பு என்ற பெயரில் தீ வைக்கப்படுகிறது. இந்த தீ வனப்பகுதிக்கும் பரவி வனங்கள் அழிகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த இடம் ஆக்கிரமித்து தேயிலை செடிகள் நடவு செய்கின்றனர். இதற்கு சில வருவாய் துறையினரும் உடந்தையாக உள்ளது.வருவாய், வனத் துறையினர்; உள்ளாட்சி நிர்வாகத்தினர், போலீசார் ஒருங்கிணைந்து வறட்சி காலத்தில் குழு அமைத்து சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புக்காக தீ வைப்பவர்களுக்கு போலீசில் புகார் கொடுத்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ