உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய வாக்காளர் இணைப்பு பணியில் கவனம் அவசியம்; ஒருவர் கூட விடுபடக்கூடாது: தேர்தல் அலுவலர் அறிவுரை

புதிய வாக்காளர் இணைப்பு பணியில் கவனம் அவசியம்; ஒருவர் கூட விடுபடக்கூடாது: தேர்தல் அலுவலர் அறிவுரை

ஊட்டி : 'புதிய வாக்காளர்களை இணைக்கும் முயற்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் திறம்பட பணிகளை மேற்கொள்வதுடன், புதிய இளம் வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடக் கூடாது,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும், ஜன.,1ம் தேதியை புதிய வாக்காளர்களுக்கு தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, புதிய பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு பழைய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு வசதியாக, மாநிலம் முழுவதும் சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலரான, கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டார்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம்

அதன்படி, ஊட்டி சட்டசபை தொகுதியில், '93,942 ஆண் வாக்காளர்கள்; 1,02,805 பெண் வாக்காளர்கள்; மூன்றாம் பாலினத்தவர் 11 பேர்,' என , மொத்தம் , 1,96,758 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கூடலுார் சட்டசபை தொகுதியில், '93,722 ஆண் வாக்காளர்கள்; 99,546 பெண் வாக்காளர்கள்.மூன்றாம் பாலினத்தவர்,' 4 பேர் என , மொத்தம், 1,93,272 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். குன்னுார் சட்டசபை தொகுதியில், '89,338 ஆண் வாக்காளர்கள்; 99,589 பெண் வாக்காளர்கள்; மூன்றாம் பாலினத்தவர், 4 பேர்,' என, 1,88,931 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மூன்று சட்டசபை தொகுதியில் மொத்தம், 5,78,961 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட தற்போது, 2,119 பேர் கூடுதலாக உள்ளனர்.

18 வயது நிறைவடைந்தவர்கள்

வாக்காளர் பட்டியலில், 'பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கனவே உள்ள பதிவுகளை நீக்குதல், திருத்தம், இடம் மாற்றம் செய்தல், ஆதார் எண் இணைத்தல்,' உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு படிவங்கள், 6, 6-பி, 7, 8, ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் . நீலகிரியில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில், 690 ஓட்டு சாவடிகள் அமைந்துள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் வாக்காளர்களிடம் மனுக்களை பெற அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு விடுமுறையை தவிர்த்து, மற்ற வேலை நாட்களில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இம்மாதம், 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் . ஓட்டு சாவடிக்கு நேரில் சென்று மனு கொடுக்க முடியாதவர்கள் www.voters.eci.gov.inஎன்ற இணையதள முகவரி வாயிலாகவோ voters helpline என்ற மொபைல் செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம். கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''புதிய வாக்காளர்களை இணைக்கும் முயற்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், புதிய இளம் வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடக் கூடாது என்பதில் கவனம் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஓட்டுரிமையை பெற்று தர வேண்டியது நம் கைகளில் உள்ளது. அதற்கான பணியை சரியாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ