உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவட்டத்தில் மலை காய்கறி தரத்தை உயர்த்த விதைகளில் கவனம் தேவை! மூன்று ஆண்டுகளில் 2,795 மாதிரிகள் பரிசோதனை

மாவட்டத்தில் மலை காய்கறி தரத்தை உயர்த்த விதைகளில் கவனம் தேவை! மூன்று ஆண்டுகளில் 2,795 மாதிரிகள் பரிசோதனை

ஊட்டி; 'நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை வினியோகஸ்தர்கள் இருப்பு வைத்துள்ள விதைகளின் தரம் குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி; 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.தோட்டக்கலை துறை, மலை காய்கறி விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வேளாண்மை விதை பரிசோதனை நிலையம், 'விதைப்பு பணிக்கு முன்பாக பிரதான காய்கறிகளின் விதையை பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்,' என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

பரிசோதனையின் முக்கியத்துவம்

மலையில் வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் விதைகளின் பங்கு இன்றியமையாதது. விதைகள் நல்ல தரத்துடன் இருப்பது அவசியம். தரத்துடன் இருந்தால் மட்டுமே, பயிர்கள் மற்ற அனைத்து இடுபொருட்களையும் ஏற்றுக் கொண்டு நல்ல முறையில் வளர்ந்து அதிகரித்த விளைச்சலை அளிக்கும். விதைகளை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்பு பருவம் வரை சேமித்து வைப்பதிலும் கவனம் தேவைப்படுகிறது.

காய்கறிகளின் விதை மாதிரி அளவு

அதன்படி, பிரதான காய்கறிகளான கேரட், காலிப்பிளவர் மற்றும் முட்டைகோஸ், 10 கிராம்; பீட்ரூட் மற்றும் முள்ளங்கி, 50 கிராம்; பீன்ஸ், 450 கிராம்; பட்டாணி, 250 கிராம்; பாலக்கீரை, 25 கிராம்; புருக்கோலி, நுால்கோல், 'டர்நீப்' ஆகியவை, 10 கிராம்,' என, பயிருக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச விதை மாதிரியை, விதை பரிசோதனை நிலையத்தில் கொடுத்து கட்டாயம் விதை பரிசோதனை செய்ய வேண்டும். அதனை முடிவு வந்த பின்பு தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். விதை பரிசோதனை நிலையம் வேளாண்மை அலுவலர் நவீன் கூறுகையில்,''விதை மாதிரிகளை கட்டாயம் விதை பரிசோதனைக்கு உட்படுத்திய பின் தான் விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். அதன்படி, 'கடந்த, 2022-23ல் 1,099 விதை மாதிரி; 2023-24ல் 1,056 விதை மாதிரி; 2024- - 25ல் இதுவரை, 640 விதை மாதிரிகள்,' என, 2,795 விதை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் இருப்பு வைத்துள்ள விதைகளை, ஊட்டி ரோஸ் கார்டன், தோட்டக்கலை இணை இயக்குனர் வளாகத்தில் அமைந்துள்ள விதை பரிசோதனை நிலையத்தில் அளிக்க வேண்டும். ஏதாவது சந்தேகம் இருந்தால் விளக்கம் பெறலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை