இந்திரா நகருக்கு இரவில் கரடி விசிட் அங்கன்வாடியை உடைத்து பொருட்கள் சூறை
குன்னுார் : குன்னுார் இந்திரா நகரில் புகுந்த கரடி, குழந்தைகள் நல மையத்தில் இருந்த பொருட்களை, சூறையாடியது.குன்னுார் இந்திரா நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு தொடர்ந்து இரவு நேரங்களில், கரடி ஒன்று வந்து செல்வதால், மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் வந்த கரடி, அங்குள்ள அங்கன்வாடி குழந்தைகள் நல மையத்தில் இரும்பு கதவை உடைத்து, உள்ளே சென்று, சத்து மாவு,அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உட்கொண்டு சேதம் செய்தும் சென்றது. மக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில் அடிக்கடி வந்து செல்லும் இந்த கரடி, ரேஷன் கடை, சத்துணவு மையங்களை உடைத்து உள்ளே சென்று பொருட்களை சூறையாடுகிறது. மக்களுக்கு அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு, கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும்,' என்றனர்.