மரத்தில் செர்ரி பழங்கள்; மருத்துவ பயன்கள் ஏராளம்
கூடலுார்; கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், காய்த்துள்ள 'இந்தியன் செர்ரி' பழங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.கூடலுாரில் ஏராளமான மூலிகை செடிகள், மருத்துவ குணங்கள் கொண்ட பழங்கள் இயற்கையாகவே விளைந்துள்ளன. இப்பழங்களை அந்தந்த சீசன்களில் மட்டுமே காண முடிகிறது. அதில், 'வைட்டமின்' சத்துக்கள் நிறைந்துள்ள, 'இந்தியன் செர்ரி' பழங்கள் தற்போது வீட்டு தோட்டங்களில் விளைந்துள்ளன.நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் உள்ள, மரத்தில் காய்த்துள்ள இப்பழங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. மஞ்சள் சிவப்பு கலந்த வண்ணத்தில் காணப்படும் இவைகளின் மருத்துவ குணங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு, வன ஊழியர்கள் விளக்கி வருகின்றனர்.தாவர ஆய்வாளர்கள் கூறுகையில்,'மருத்துவ குணம் கொண்ட இந்த பழங்களில் வைட்டமின் 'சி' சத்து நிறைந்துள்ளதால், இதனை உட்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆஸ்துமா நோய் பாதிப்பு உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். இப்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட பழங்களை கண்டறிந்து வகைப்படுத்தினால், எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பழங்களை உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்தினால், அவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்,' என்றனர்.