பள்ளி மீது விழுந்த மரக்கிளையால் பாதிப்பு
குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடப்பதால், தோண்டப்பட்ட இடங்களில் இருந்த மண், கற்கள் மழை நீரில் அடித்து சென்று ஊராட்சி ஒன்றிய பள்ளிக்குள் புகுந்தது.பள்ளி சீரமைக்கப்பட்ட பின், ஆய்வு மேற்கொண்ட கூடுதல் கலெக்டர் சங்கீதா பள்ளியை சுற்றி அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற உத்தரவிட்டார். ஆறு மரங்களின் கிளைகள் வெட்டும் பணியில் தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, 4:15 மணியளவில் மரக்கிளை வெட்டும் போது மரத்தின் கிளை பள்ளி கட்டடத்தின் மீது விழுந்தது. மாணவ, மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கூரை மட்டும் பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில், கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.