சேதமடைந்த புளியாம்பாறை அரசு பள்ளி சாலை
கூடலூர்: கூடலூர், சேதமடைந்து வரும் புளியாம்பாறை அரசு பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர். கூடலூர், புளியாம்பாறை ஜங்ஷனிலிருந்து மாரியம்மன் கோவில் தெரு கிராமத்துக்கு இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை, கோவில் தெரு, தரிபுட்டி, பொட்டுகண்டி கிராம மக்கள் மற்றும் அரசு உயர்நிலை பள்ளிக்கு மாணவர்கள் சென்று வரவும் பயன்படுத்தி வருகின்றனர். 800 மீட்டர் தூரமுள்ள இச்சாலையில் பாதி தூரம் சிமென்ட் சாலையாகவும், மீதம் உள்ள சாலை தார் சாலையாகவும் உள்ளது. இச்சாலை, பல ஆண்டுகளாக, பராமரிக்கப்படாததால், தற்போது பல இடங்களில் சேதமடைந்து, வாகனங்கள் இயக்கவும், மக்கள் மற்றும் மாணவர்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையில் வழிந்தோடும் மழை நீரால், சாலை தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. இதனை தடுக்க, தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகம் சாலையை ஆய்வு செய்து, சீரமைக்க வலியுறுத்தியுள்ளனர்.