| ADDED : ஜன 02, 2026 06:14 AM
கூடலுார்: 'கூடலுார் வனக்கோட்டத்தில் நடப்பாண்டு ஒரு மனித உயிரிழப்பும் ஏற்படாமல் இருக்க, அனைவரும் குறிக்கோளுடன் பணியாற்ற வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது. கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், மனித-விலங்கு மோதல் மற்றும் முரண்பாடுகளை தவிர்ப்பது குறித்து, முன்கள பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. ஜீன்பூல் வனச்சரகர் ரவி வரவேற்றார். டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்து பேசுகையில், ''கடந்த ஆண்டு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றியதன் விளைவாக, கூடலுார் வனக்கோட்டத்தில் மின்சாரம் அல்லது இயற்கைக்கு மாறான வகையில் ஒரு யானை உயிரிழப்பு கூட நடைபெறவில்லை. இதற்கு முன்கள வன ஊழியர்கள் பங்கு மகத்தானது. நடப்பாண்டு இந்த வனக்கோட்டத்தில் வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு ஒன்று கூட ஏற்பட கூடாது, என்ற குறிக்கோளுடன் பணியாற்ற வேண்டும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தற்போது வனத்துறையிடம் உள்ளது. நமக்கு உதவுவதற்காக தேவையான வாகனங்கள், ட்ரோன் கேமராகள் நம்மிடம் உள்ளது. எந்த தொழில்நுட்பம் இருந்தாலும், அனைவரும் நம் பணியை சரியாக செய்ய வேண்டும். அதற்கான திறமையும் உறுதியும் உங்களிடம் உள்ளது. அனைவரின் ஒத்துழைப்பால் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, இங்கு பணியாற்ற பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். களப்பணியை சிறப்பாக செய்யும், உங்கள் தேவையை அறிந்து அதனை பூர்த்தி செய்யவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார். முகாமில், வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், சஞ்சீவ், ரவி, அய்யனார், மேகலா; வனவர்கள், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர். ஓவேலி வனச்சரகர் வீரமணி நன்றி கூறினார்.