உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூமிக்கு மனித குலம் தேவையில்லை; மனிதர்களுக்கு தான் பூமி தேவை

பூமிக்கு மனித குலம் தேவையில்லை; மனிதர்களுக்கு தான் பூமி தேவை

கூடலுார்; கூடலுார் அருகே உள்ள மசினகுடி வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., பள்ளியில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:பூமி தன்னுடைய வரலாற்றில், சமநிலை பாதிக்கப்படும் சூழ்நிலைகளில், ஒரு பேரழிவை உண்டாக்கி, தன்னை சமன்படுத்திக் கொள்ளும். இதுவரை, ஐந்து முறை பூமி பேரழிவை சந்தித்துள்ளது.தற்போது, இரண்டு உலக போர்களை சந்தித்த உலகம், மூன்றாவது உலக போருக்கு தயாராக இல்லை. 'ஏனெனில், போர் கருவிகளான அணுகுண்டுகள் எதிரிகளை மட்டுமல்ல, தங்களையும் அழித்துவிடும்,' என, அனைத்து நாடுகளுக்கும் தெரியும்.அணு குண்டுகளுக்கு மாறாக, புதிதாக வந்திருக்கும் மற்றொரு அழிவு கருவி காலநிலை மாற்றம். புவி வெப்பம், பல்லுயிர் சூழல்களின் அழிவு, பனி மலைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல், வெப்ப அலைகள் மற்றும் வலிமையான புயல்கள் போன்ற அனைத்துமே காலநிலை மாற்றம் என்ற அழிவு கருவியின் அங்கமாகும். பூமி எந்த காலத்திலும் அழியாது. தன்னை சமன்படுத்தி கொள்ள பூமியில் வாழும் சில உயிரினங்களை அழிக்கும். பூமியில் முதலில் தோன்றிய 'சைனோ பாக்டீரியா' என்ற உயிரினம், கழிவு பொருளாக ஏராளமான ஆக்சிஜனை உற்பத்தி செய்தது.அந்த இனம் அழிந்துவிட்டது. ஆனால், அது உற்பத்தி செய்த ஆக்சிஜனை உண்டு வாழக்கூடிய ஏராளமான உயிரினங்கள் பூமியில் தோன்றியுள்ளன.அதுபோல, மனித குலம் உற்பத்தி செய்துள்ள கழிவு பொருட்களை உண்டு வாழும் புதிய உயிரினங்கள் தோன்றலாம். பூமிக்கு மனிதகுலம் தேவையில்லை; மனிதர்களுக்கு தான் பூமி தேவை. அதனால், இந்த பூமியை காக்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அணில் குமார் வரவேற்றார். ஆசிரியர் மாதேவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ