உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழமையான கார்களில் சுற்றுலா வந்த வெளிநாட்டினர்

பழமையான கார்களில் சுற்றுலா வந்த வெளிநாட்டினர்

குன்னுார்: ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பழமை வாய்ந்த கார்களில் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 'கார்ரேலி' நடத்தி வருகின்றனர்.பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகளில் இருந்து புருனோ என்பவர் தலைமையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 45 பேர், 22 பழமையான கார்களில், நம் நாட்டின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.கடந்த, 14ல் கோவாவில் துவங்கிய பழமை வாய்ந்த கார் ரேலி, ஹூப்ளி, ஹாம்பி, சிக்மகளூரு, கூர்க், மைசூர் வழியாக, நேற்று நீலகிரி மாவட்டம் குன்னுார் வந்தடைந்தது. குன்னுார் 'கேட்வே' ஓட்டலில் சுற்றுலா துறை அதிகாரிகள், தோடர் பழங்குடியின மக்கள் வரவேற்பு அளித்தனர்.

கிராம சாலைகளில் பயணம்

இந்த ரேலிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டுள்ள திருச்சி சோழன் டூர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சாமுவேல் ஜெபராஜ் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், அவர்களின் பழமையான கார்களுடன் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்த ஆண்டு நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.அதில், 1932ல் இருந்து 1970 வரையிலான பழமை வாய்ந்த, 'ஜாகுவார், மெர்சிடிஸ் பென்ஸ், போர்ஷ், பென்ட்லி எம்.ஜி., ஆல்விஸ், வால்வோ' உள்ளிட் ட கார்களில் சுற்றுலா வந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லாமல் கிராமபுற சாலைகளில் செல்கின்றனர். நாளை (இன்று) பொள்ளாச்சி ஆனைமலை சென்று அங்கிருந்து, கொச்சி, தேக்கடி, மதுரை, தஞ்சாவூர், புதுவை வழியாக வரும், 1ம் தேதி சென்னையை அடைகின்றனர். சுற்றுலா பயணி ஹெல்கா பிரைட்ரிச்ஸ் கூறுகையில், ''1932ல் தயாரிக்கப்பட்ட இந்த ஆல்விஸ் காரை, 30 ஆண்டுகளாக ஓட்டி வருகிறேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த மாடல் இருந்தது. அதன் பிறகு மாற்றப்பட்டுள்ளது, உலகம் முழுவதும், 12 முறை கடந்து வரும் துாரம் அளவிற்கு, இந்த கார் பல பகுதிளுக்கும் பயணம் செய்துள்ளது. எங்கள் பயணத்தில் இந்தியாவின் கிராமங்கள் மிகவும் அழகாக உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி