இடம் பெயரும் யானை கூட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
ஊட்டி:இடம் பெயரும் யானை கூட்டத்தால், மக்கள் இரவு நேர பயணங்களை தவிர்க்கும்படி வனத்துறையினர் தெரிவித்தனர்.நீலகிரி மாவட்டம், கெத்தை, முள்ளி வனப்பகுதியில் நீராதாரத்துடன் தேவையான உணவு கிடைக்கிறது. மேலும், இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இந்த பகுதியில் உள்ளதால், இப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. தற்போது, கேரள வனத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து, கெத்தை வனத்தில் முகாமிட்டுள்ளன. இவை, பகல் நேரங்களில் சாலையில் குட்டிகளுடன் கூட்டமாக உலா வருகின்றன. ரேஞ்சர் செல்வகுமார் கூறுகையில், ''கெத்தை - முள்ளி இடையே குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. சாலையில் கூட்டமாக செல்லும் யானைகளை தொந்தரவு செய்வது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யானைகள் நடமாட்டம் இருப்பதால், இரவு நேர போக்குவரத்தை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.