உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மன உளைச்சலில் வன பணியாளர்கள்: அச்சத்தில் பொதுமக்கள் கண்காணிப்பு பணியில் உறக்கம் இல்லாமல் பணியாற்றும் சூழ்நிலை

மன உளைச்சலில் வன பணியாளர்கள்: அச்சத்தில் பொதுமக்கள் கண்காணிப்பு பணியில் உறக்கம் இல்லாமல் பணியாற்றும் சூழ்நிலை

பந்தலுார்; பந்தலுார் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானையை வன குழுவினர், 24 மணி நேரமும் கண்காணித்து வரும் நிலையில், உறக்கம் இல்லாமல் மன உளைச்சலுடன் பணியாற்றும் சூழலில் உள்ளனர். கூடலுார் வனக்கோட்டத்தில் ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகள், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில வனப்பகுதிகளின் இணைப்பு பகுதியாகவும், மூன்று மாநில வனவிலங்குகள் வந்து செல்லும் வழித்தடங்களை உள்ளடக்கிய பகுதியாகவும் உள்ளது. இதனால், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். அதில், கூடலுார் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 150 காட்டு யானைகள் உள்ளதாக வனத்துறை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தினசரி இந்த யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

அச்சுறுத்தி வரும் யானை

இந்நிலையில், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து, பொதுமக்களை புல்லட் என்று அழைக்கப்படும் ஆண் யானை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிடித்து செல்ல வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏழு நாட்களாக, குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில் இருந்து யானை வெளியே வராமல், வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதில், மொத்தமாக, 75 வனப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பகல் இரவு என 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் உடல் சோர்வு ஏற்பட்டும் மன உளைச்சலுடன் வனப் பணியாளர்கள் பணியாற்றும் நிலை தொடர்கிறது.

மீண்டும் போராட்டம் நடத்த திட்டம்

ஆனால் ஆய்வுக்கு வரும் வனத்துறை உயரதிகாரிகள், ஒரு சில நிமிடங்கள் மட்டும் இந்த யானையின் நடமாட்டத்தை பெயரளவுக்கு ஆய்வு செய்வதுடன், யானை புதர் பகுதியில் இருந்து வெளியேறாமல், பார்த்துக்கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளனர். வனத்துறையினர் கண்காணிப்பை மீறி, புல்லட் யானை வெளியில் வந்தால் அதற்கு அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினரை பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சேரம்பாடி டான்டீயை சேர்ந்த கணபதி கூறுகையில், ''இப்பகுதியில் நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானைகள்நடமாடி வருகிறது. ஆனால், குறிப்பிட்ட ஒரு யானை மட்டுமே பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதுடன், வீடுகளையும் இடிக்கிறது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்திபிடித்து செல்லாவிட்டால், பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை