உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விஷம், சுருக்கு கம்பியால் புலிகள் கொல்வதை தடுக்க இணக்கமான உறவு அவசியம்! கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

விஷம், சுருக்கு கம்பியால் புலிகள் கொல்வதை தடுக்க இணக்கமான உறவு அவசியம்! கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கூடலுார்; கர்நாடகாவில் ஒரே நேரத்தில், 5 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நீலகிரியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களிடம் வனத்துறையினர் இணக்கமான உறவுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டிய மசினகுடி, கூடலுார் மற்றும் நீலகிரி வனக்கோட்ட பகுதிகள் புலிகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளன. இப்பகுகளில்,கடந்த, 2023ல் ஆறு புலிக்குட்டிகள் உட்பட, 10 புலிகள் பல்வேறு காரணங்களால் இறந்தன. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. அதில், 'ஆறு குட்டிகள் இயற்கையாகவும், சண்டை காரணமாக இரண்டு புலிகள் இறந்துள்ளது. இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இது தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,' என, தெரியவந்தது. ஆனால், இந்த சம்பவத்தில் தாய் புலிகள் நிலைகுறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு மாவட்டத்தில், 6 புலிகள் உயிரிழந்தன. அதில், கூடலுார், பிதர்காடு பகுதியில், விஷம் வைத்த பன்றியின் இறைச்சியை உட்கொண்டு குட்டியுடன் ஒரு புலி இறந்தது. கூடலுார் செலுக்காடி அருகே, சுருக்கு கம்பியில் சிக்கி, 4 வயது ஆண் புலி இறந்தது. இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். நடப்பு ஆண்டு இதுவரை, 5 புலிகள் இறந்துள்ளன.

எல்லையில் ஐந்து புலிகள் பலி

இந்நிலையில், தமிழக எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மாதேஸ்வரன் மலையில், வனவிலங்கு சரணாலயத்தில், கடந்த வாரம் விஷம் வைத்து ஐந்து புலிகள் கொல்லப்பட்டன. விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த கிராமவாசி ஒருவர், பசுவை கொன்ற புலியை பழிவாங்க, அதன் இறைச்சியின் மீது பூச்சிக்கொல்லி மருந்தை கலந்துள்ளார். அதனை உட்கொண்ட புலிகள் உயிரிழந்தது தெரியவந்தது. இது, தொடர்பாக இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சூழ்நிலையில், வனத்தை ஒட்டிய கிராமப்பகுதிகளில் வாழும் விவசாயிகள்; மக்களிடம், வனத்துறை இணக்கமான உறவுடன் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'வனத்துறையினர், பொதுமக்களிடம் நேரடியாக சென்று, வனம் மற்றும் வனவிலங்குகளின் முக்கியத்துவும், உணவு சங்கிலி வாழ்வியலில், புலியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுடன் இணக்கமாக இருப்பதன் மூலம், புலிகள் கிராமங்களுக்கு வந்தால், அவை சுருக்கு, விஷம் வைத்து கொல்லப்படுதை தடுக்க முடியும். புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகள் தாக்கி கால்நடைகள் இறந்தால், அதனை ஈடு செய்ய, அரசு முழு இழப்பீடு தொகையை தாமதமில்லாமல் வழங்கினால் பெரும் பயன் ஏற்படும்,' என்றனர்.

'தடம்' குழு உருவாக்கப்பட்டு விழிப்புணர்வு

கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''வனவிலங்கு நடமாட்டம், பாதுகாப்பு குறித்து கண்காணித்து தகவல் தெரிவிக்கவும், வனத்துறைக்கு உதவும் வகையில், உள்ளூர் இளைஞர்களை இணைத்து, 'தடம்' என்ற குழு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்க மாதம் தோறும் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. தற்போது, தெரு நாடகம் வாயிலாக, காடுகள், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. நம் மாவட்டத்தில், விஷம் மற்றும் சுருக்கு வைத்து வனவிலங்குகள் வேட்டையாடும் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஏற்கனவே, இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை