உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆராய்ச்சி மையத்தில் அறுவடை பணி; ஆய்வுக்காக விதை நெல் வகை சேகரிப்பு

 ஆராய்ச்சி மையத்தில் அறுவடை பணி; ஆய்வுக்காக விதை நெல் வகை சேகரிப்பு

கூடலுார்: கூடலுார், புளியாம்பாறை, வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி மையத்தில்,ஆய்வுக்காக நடவு செய்யப்பட்ட, நெற் கதிர்களை அறுவடை செய்து, அதில் நெல் விதை சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடலுார் பகுதியில் வழக்கத்தை விட முன்னதாக பருவமழை பெய்தது. பாசனநீர் குறித்த நேரத்தில் கிடைத்ததால், விவசாயிகள் ஜூன் மாதம் நெல் நடவு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், கூடலுார் புளியாம்பாறையில் செயல்பட்டு வரும், கோவை வேளாண் பல்கலைக்கழக, ஒட்டுநெல் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை மாதம் வயல்களில் உழவு பணிகளை மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புக்கான நெல் வகைகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பணி நடந்து வருகிறது. அதில், கோவை வேளாண் பல்கலைக்கழக கண்டுபிடித்த 'கோ-50' உள்ளிட்ட நெல் வகைகள் பயிரிட்டுள்ளன. ஆய்வுக்காக நடவு செய்யப்பட்ட நெற்கதிர்கள் முதிர்ந்த நிலையில், நெல் அறுவடையை துவங்கியுள்ளனர். அறுவடை செய்யப்படும் நெல் விதைகளை ஆய்வுக்காக, தனித்தனி பைகளில் சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வாளர்கள் கூறுகையில், 'இங்குள்ள நெல் ஆராய்ச்சி மையத்தில், ஆராய்ச்சி நிலையில் உள்ள புது நெல் வகை நாற்றுகளை நடவு செய்யும் பணி ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டது. அதில், ஆய்வுக்காக நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களில் முதிர்ந்த நிலையில் உள்ளவற்றை அறுவடை செய்து, தனித்தனியாக ஆய்வுக்காக சேகரித்து வருகிறோம். சேகரிக்கப்படும், விதை நெல் ஆய்வுக்காக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ