உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விலங்குகளால் பாதித்தவர்களுக்கு காப்பீடு திட்டம் அவசியம்; மத்திய அரசிற்கு மனு

விலங்குகளால் பாதித்தவர்களுக்கு காப்பீடு திட்டம் அவசியம்; மத்திய அரசிற்கு மனு

குன்னுார்; 'வாகன சட்டத்தில் உள்ளதை போன்று, வனவிலங்குகளால், பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலத்தில், அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. சமீப காலமாக, காட்டெருமை, யானை, கரடி, சிறுத்தை, மான் உட்பட வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், அவை குடியிருப்புகளை நோக்கி இடம் பெயர்வதால், வனவிலங்கு -- மனித மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.நீலகிரி மட்டுமின்றி, நாட்டில் பல்வேறு இடங்களிலும், வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நிரந்தர உடல் உறுப்பு ஊனம் போன்ற பாதிப்புகளுக்கு, அரசியல் சட்டத்தில் எந்த ஒரு இழப்பீடும் பெறுவதற்கு சட்ட திட்டம் இல்லை. நாட்டில் கடந்த 2023 --24 ல் 486 பேர் வனவிலங்குகளால் உயிரிழந்துள்ள நிலையில், மாநில அளவில் வேறுபட்ட இழப்பீடுகள் வழங்கப்பட்ட போதிலும், அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமானதாக இல்லை.நீலகிரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி சஜீவன் கூறுகையில், ''வாகன காப்பீடு சட்டம், 2023ல், உயிரிழப்பு மற்றும் நிரந்தர ஊனம் போன்றவைகளுக்கான இழப்பீடு, வயது, சம்பளம் போன்றவைகளை கணக்கீடு செய்து வழங்கும் நடைமுறை உள்ளது. ஆனால், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு காப்பீடு திட்டம் இல்லாததால், உரிய நிவாரணம் இல்லாமல் உள்ளனர்.எனவே, வனவிலங்குகள் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒரே இழப்பீடு முறையை நாடு முழுவதும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள்; பழங்குடியினர் மற்றும் வனத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு வழங்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்படும் நபர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.வனங்களை காப்பதற்கு பல கோடி ரூபாய் நிதியில், எஸ்டேட் தொழிலாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை அரசே முன் நின்று செயல்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தி, பிரதமர், மத்திய வன, சுற்றுச்சூழல் அமைச்சர், மத்திய சட்டம் மற்றும் நீதி துறை அமைச்சக செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை