நெல்லியாளம் நகராட்சியை நம்பி பயனில்லை; சாலை சீரமைக்க களம் இறங்கிய மக்கள்
பந்தலுார் : பந்தலுார் அருகே பொன்னானி பகுதியில், சாலை சீரமைக்க நகராட்சி அலட்சியம் காட்டியதால், மக்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நெல்லியாளம் நகராட்சி எல்லை பகுதியாக பொன்னானி பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து குன்றில்கடவு செல்வதற்கு, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் மண் சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது. பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், நெல்லியாளம் நகராட்சி மூலம் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் மக்களின் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது. இப்பகுதி பழங்குடியின மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும், விவசாய விளை பொருட்களை ஆட்டோ மற்றும் ஜீப் மூலம் கொண்டு வருவது மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாகனங்களை கொண்டு செல்வது என சிரமம் இன்றி பயணித்தனர். இந்த சாலை சேதமடைந்ததால் வாகன போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால், பசுந்தேயிலை மற்றும் நேந்திரன் வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை, ஒரு கி.மீ., துாரம் தலை சுமையாக துாக்கி வர வேண்டிய நிலையில், பள்ளி மாணவர்கள் நோயாளிகள் சிரமப்பட்டனர். சாலையை சீரமைக்க நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் நொந்து போன மக்கள் பேபி, ஷாஜி, மணிவேல் ஆகியோர் தலைமையில் குடியிருப்பு வாசிகள் பணத்தை செலவு செய்து, சிமென்ட், ஜல்லி, மணல் ஆகியவற்றை வாங்கி சேதமடைந்த சாலையை சீரமைத்தனர். நகராட்சி நிர்வாகம் மீது, அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.